Sunday, March 4, 2012

எங்கள் ஊர் மரடோனா "வெள்ளை"

அது யாழ்.மத்திய கல்லூரி மைதானம். குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகத்துக்கும் ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்துக்கும் இடையிலான உதைபாந்தாட்டப் போட்டி. அதில் ஒரு கணம், ஊரெழு கோல் காப்பாளர் நெல்சன் பந்தை அடிக்கிறார். உயர்ந்து வருகிறது, வலது கரையாக நிற்கும் அந்த வீரனை நோக்கி. அவரும் முன்னாலே ஓடுகிறார்.பந்தும் மேலால் வந்து கொண்டு இருக்கிறது. அது தரையைத் தொட முன்னர் அந்த வீரன் மிகத்துல்லியமாக கணித்து பந்திற்கு ஓங்கி உதைக்கிறார். பந்து வேகமாக எதிரணியின் ‘கோல்க்’ கம்பம் நோக்கிச் செல்கிறது. கோல் காப்பாளரால் அந்தப் பந்தைப் பிடிக்கவோ/தடுக்கவோ முடியாது. ஆனால் பந்து கம்பத்தை தொட்டு வெளியே செல்கிறது. ஆம் இப்படி அடிக்கடி தனது தனித்துவமான ஆட்டங்களால் எங்கள் மனதில் ஆழப்பதிந்த பெயர்தான் ‘வெள்ளை’. தர்மகுலநாதன் அவரது இயற்பெயர். 



கிடுகுவேலி:வணக்கம் வெள்ளையண்ணை.
வெள்ளை :வணக்கம் சொல்லுங்கோ..
கிடுகுவேலி : இப்ப உங்களோட கதைக்கலாமோ?
வெள்ளை : ம்ம்ம் கதைக்கலாம...ஆனால் பின்னேரம் ஒரு 'மட்ச்' இருக்கு கென்றிசோட....
கிடுகுவேலி : நீங்களும் விளையாடுறீங்களோ?
வெள்ளை : (ஒரு சின்ன சிரிப்புடன்...).ம்ம்ம் சும்மா விளையாடுறனான்....!!

வெள்ளை பற்றிய தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று அவரோடு தொடர்பு கொண்ட போது நடந்த உரையாடல் இது. வயது 50 ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னமும் ஆடின கால் அடங்க மறுத்து காலில் ‘பூட்ஸ்’ போட்டுக் கொண்டு களத்தில். என்னால் நம்பவே முடியவில்லை. சிறுபராயத்தில் நான் பார்த்து பார்த்து பிரமித்த ஒரு விளையாட்டு வீரன். அந்த நாடு முழுவதும் போற்றியிருக்க வேண்டிய ஒரு மகத்தான சாதனை வீரன். ஆனால் அங்கிருந்த அசாதரண சூழல்களும், குடும்ப நிலையும் ஒரு குறிக்கப்பட்ட பிரதேசத்துக்குள்ளேயே அவரை முடக்கி விட்டது.

இதனை நான் வெறும் வார்த்தைக் கோலங்களுக்காக சொல்லவில்லை. யாழ் மண்ணில் வாழ்ந்து காற்பந்தாட்டப் போட்டிகளை நேசித்தவர்கள் அனைவரும் இதனை நன்கு அறிவர்.

போட்டிக்கு முன் தன்னம்பிக்கையுடன் காத்திருக்கிறார்
நெஞ்சை நிமிர்த்திய தோற்றம். நெடிய உருவம். நல்ல ஆகிருதி. கட்டுக்குலையாத தேகம். மாநிறம். இவையெல்லாம் அந்தநாட்களில் நான் கண்ட "வெள்ளை" இனது தனித்துவமான அடையாளங்கள். இப்போதெல்லாம் தொலைக்காட்சியூடாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் மெஸ்ஸி, ரொனால்டோ, ரூனி எல்லோரையும் அறியும் முன்னர் எமக்கெல்லாம் சுப்பர் கீரோ என்றால் அது வெள்ளைதான். எங்கள் மண் நன்கறிந்த ஒரு ஒப்பற்ற வீரன். வேகம், விவேகம், லாவகம், எல்லாம் ஒருங்கே வரப்பெற்றவர்.

அந்த நாட்களை எண்ணிப்பார்க்கிறேன். காலையில் எழுந்ததும் 'உதயன்' பத்திரிகையின் கடைசிப்பக்கத்தில் வரும் செய்தியான "இன்றைய ஆட்டங்கள்" பகுதிக்கே கண்கள் செல்லும். அதிலே ஊரெழு றோயல் எதிர் -------- என்று கண்டால் ஏனோ தெரியவில்லை மனதுக்குள் பூரிப்புத்தான். மாலையில் நடைபெறும் ரியுசன், அது எந்த வகுப்பாக இருந்தாலும், அல்லது யாருடைய வகுப்பாக இருந்தாலும் கவலைப்படாமல் 'கட்' அடித்து செல்வது என்று அப்போதே முடிவாகிவிடும். எதிரணி எது என்பது கூட கவலையில்லை. சும்மா சாக்குப் போக்குச் சொல்லி அம்மாவிடம் 20ரூபா வாங்கி மைதானத்துக்குச் சென்று அந்த வீரனின் விளையாட்டை காண்பதில் அவ்வளவு சந்தோசம் இருந்தது. அதுதான் அதியுச்ச மகிழ்வான நேரம் எமக்கு.

வெள்ளை ஊரெழுவில் பிறந்து, வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திலும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வி கற்கின்ற போதே பாடசாலை அணிக்காக விளையாடியவர். பாடசாலை அணி பல வெற்றிகள் பெறுவதற்கு காரணமாயிருந்தார். 16 வயதை எட்டியதும் கல்லூரி அணி என்பதைத் தாண்டி கழக அணிக்குள்ளும் கால் வைக்கத் தொடங்கிவிட்டார். அது அவருடைய தந்தையார் மற்றும் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட றோயல் விளையாட்டுக் கழகம்தான். சிறுவயதிலேயே அனைவரையும் தன்பக்கம் ஈர்த்துவிட்டார். அன்று தொடங்கிய வெள்ளையின் ‘உதைபந்தாட்ட இராச்சியம்’ இன்றும் தொடர்கிறது என்றால் அது மிகையல்ல. இதில் இருந்து வெள்ளையின் விளையாட்டின் அர்ப்பணிப்பையும் தனிமனித ஒழுக்கத்தையும் நாம் உணர்ந்து கொள்ளலாம். "றோயல் வெள்ளை" பற்றிக் கதைக்காமல் அந்தக் காலப்பகுதியில் காற்பந்தாட்டத்தை கதைக்க முடியாது.

வெற்றிக்கோப்பையோடு..வெள்ளை
வெள்ளைக்கு பெரும் ரசிகர் பட்டாளம். மற்ற அணி ரசிகர்கள் எல்லாம் தமது அணி விளையாடாத போது வெள்ளையின் விளையாட்டை காண வருவர். உண்மையில் அவர் ஒரு நாயகனாகவே வலம் வந்தவர். அன்று றோயலுக்குப் போட்டி என்றால், மாலையில் அவரை ஒருவர் (கூடுதலாக பாலா அண்ணை - ஊரெழு நண்பர்களுக்கு தெரியும்)மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வருவார். வெள்ளை மைதானத்துக்குள் வந்து விட்டால் ஒரு சிறிய சலசலப்பு. அவரின் வயது முதிர்ந்த ரசிகர்களின் "தம்பி என்ன மாதிரி" என்ற கேள்வியில் நிறைய இருக்கும். குசலம் விசாரிப்பது போலவும் அமையும். அன்றைய போட்டி எப்படி இருக்கப் போகிறது என்றும் அமையும். அவர் மேல் ரசிகர்கள் அவ்வளவு பாசமாகவும் விசுவாசமாகவும் இருப்பார்கள்.

 வெள்ளை விளையாடினால் எதிரணிக்கு கலக்கமே. எந்தக் கோல் காப்பாளருக்கு எப்படி அடிக்க வேண்டும் என்ற வித்தை நன்கு தெரிந்தவர். அப்போது மிகச்சிறந்த காப்பாளர்களாக பல்கலைகழக அணி அருளும் பாடும்மீன் ரவியும் இருந்தார்கள். ஆனால் அவர்களையும் உச்சி கோல் அடிக்கும் உத்தி வெள்ளைக்கு நன்றாகத் தெரியும். 

வெள்ளை அணியும் மேற்சட்டை (ஜேர்சி) எண் 10. அந்தக்காலம் தொட்டு 10ம் இலக்கம் என்பது உதைபந்தாட்டத்தில் ஒரு 'மஜிக்' இலக்கம். பீலே முதல் மரடோனா..ஏன் இன்றைய மெசி வரை 10ம் இலக்கத்துடனேயே மைதானத்துக்குள் வலம் வருகிறார்கள். அன்று யாழ் மண்ணிலும் இந்தக் கலாசாரம் தொடர்ந்தது. சிறந்த பிரபல வீரர்கள் 10ம் இலக்க மேற்சட்டையே அணிந்திருந்தனர். குருநகர் பாடும்மீன் கொலின், நாவாந்துறை சென்.மேரிஸ் பவுணன், பாஷையூர் சென்.அன்ரனீஸ் றோய் (பெரிய), இளவாலை சென்.கென்றீஸ் ஜெயக்குமார், மயிலங்காடு ஞானமுருகன் சிந்து, பல்கலைக்கழக அணியில் நேசன், என் இந்தப்பட்டியல் நீளும்.

இன்னும் தொழில் முறையாக விளையாடும் எந்த விளையாட்டும் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை. சிறிலங்காவின் தெற்கு பகுதியான கொழும்புவில் இருந்தாலும், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இல்லை என்றே சொல்லலாம். எனவே இவர்கள் அனைவரும் பகலிலே தமது அன்றாட வாழ்வாதாரத்துக்கான உழைப்பில் ஈடுபட வேன்டும். மாலையில் கிடைக்கின்ற நேரத்தில் பயிற்சி எடுக்க வேன்டும்.  அப்போதெல்லாம் பயிற்றுவிப்பாளர்களோ, அணிக்கான முகாமையாளர்களோ இல்லை (இப்போதும் அப்படியே). அவர்கள் விளையாடுவதற்கு மைதானம் இருப்பதே பெரிய விடயம். பெரிய அளவில் பயிற்சி என்றில்லை. சும்மா இரண்டு அணிகளாக பிரித்து விட்டு விளையாடுவது. அவ்வளவே, அது தான் அவர்களின் பயிற்சி. இப்படியெல்லாம், குடும்பத்தை பார்த்து, உழைத்து, போதிய பயிற்சி இல்லாமல் விளையாடிய போதும் அவர்களுடைய விளையாட்டில் ஒரு நளினமும் ஈர்ப்புத்தன்மையும் இருந்தது. அநேக மக்கள் அந்தப் போட்டிகளை எல்லாம் மனதார பார்த்து ரசித்தார்கள். குருநகர், பாசையூர், நாவந்துறை வீரர்கள் இரவில் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது. காலையில் அதனை யாருக்கும் விற்று விட்டு, பகலில் தூங்குவது. மாலையில் விளையாட்டு. கடலுக்கு போனவர் திரும்பி வருவரா? மாட்டாரா? என்றிருந்த காலம். இப்படித்தான் வெள்ளையும் ஒரு மரக்கறி வியாபாரி. மதியத்தோடு வீடு வந்து ஓய்வெடுத்துவிட்டு மாலையில் பயிற்சி. 

ஒரு உதைபந்தாட்ட வீரன் தனித்துவமாக மிளிர வேண்டுமெனில் அவரிடம் தனிப்பட்ட முறையில் நிறைய திறமைகள் வேண்டும். அணியோடு ஒத்து விளையாடுகின்ற பக்குவம் வேண்டும். வெள்ளை இவற்றிற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. ஆனால் இவை தவிர்த்து வெள்ளை களத்திலே ஒரு நல்ல மனிதர். வெள்ளை தப்பான ஆட்டம் ஆடுவது அரிது என்றே சொல்லாம். ஏனைய வீரர்கள் (றோயல் அணி) வெள்ளைக்குப் பயம். யாராவது தப்பான ஆட்டம் ஆடினால், அல்லது நடுவரோடு வாய்த்தகறாறில் ஈடுபட்டால் ‘டேய் விசிலுக்கு விளையாடுங்கடா. சரி-பிழை வெளியால நிக்கிற சனத்துக்குத் தெரியும்’ என தனது வீரர்களுக்குச் சொல்லி உற்சாகப்படுத்துவார். எதிர் அணி வீரர்களோடு முரண்படும் இடம் வரும்போதெல்லாம் தனது அணிவீரர்களை சமாளித்து, ரசிகர்களின் ஆர்ப்பரிப்பை அடக்கி போட்டி தொடர்ந்து நடக்கக்கூடியவாறு செய்துவிடுவார். இதுதான் வெள்ளையிடம் ஏனைய அணிவீரர்களும் ரசிகர்களும் மரியாதை வைக்கக் காரணம். 

சக வீரர்களுடனும் ரசிகர்களுடனும்
இதுவரை வெள்ளை சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட கோல்களை அடித்திருப்பார். இதனை அவரும் உறுதிப்படுத்துகிறார். தனது வாழ்நாளில் இதுவரை ஆயிரம் கோல்கள் அடித்தவரை எமது தேசம் எப்படி கௌரவித்திருக்க வேண்டும்? மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட வீரர். இவரது ஆரம்பகாலத்தில் ஒரு போட்டியில், யங்றோயல் அணி 2-0 என்று முன்னனியில் இருந்தது. போட்டியில் வெள்ளை விளையாடவில்லை. இடதுகாற் பெருவிரல் நகம் விழுந்ததே காரணம். போட்டி முடிவடைய 5 நிமிடங்கள் இருந்தது. வெள்ளையின் கால்கள் துடித்தது ஏதாவது செய்ய வேண்டும் என. உள்ளே இறங்கத் தயாரான போது, ஏனையவர்கள் தடுத்தார்கள். நீயும் விளையாடித் தோற்றோம் எனச் சொல்வார்கள். ஆனால் வெள்ளை உள்ளே இறங்கிவிட்டார். இறங்கிய உடனேயே படுசாதுரியமாகவும் வேகமாகவும் ஒரு கோலைப் போட்டார். ஆனால் அடுத்த நிமிடத்தில் மீண்டும் யங்றோயல் அணி ஒரு கோலைப் போட 3-1. றோயல் அணியின் தோல்வி உறுதி என நினைத்திருந்த வேளை வெள்ளையின் மின்னல் வேக ஆட்டம் வெளிப்பட்டது. தனது சகல திறமைகளையும் ஒருங்கே குவித்து ஆட்டம் முடிவடைவதற்குள் 2 கோல்களையும் போட்டார். 3-3 இப்போது. பின்னர் ‘பெனால்டி’ உதை மூலம் றோயல் வென்றது. இதுதான் வெள்ளை. இப்படித்தான் வெள்ளை எல்லோர் மனதிலும் வீற்றிருக்கிறார். 

உதைபந்தாட்டத்தில் ‘ஸ்லிப்’ அடிப்பது என்பது ஒரு கலை. ஆனால் எப்படியோ தெரியாது, எந்த அணிவீரர்களாலும் வெள்ளைக்கு ‘ஸ்லிப்’ அடிக்க முடிவதில்லை. பாடும்மீன் கழகத்தில் விசயன் அல்லது சிலிப்பன் ( ‘ஸ்லிப்’ அடிப்பதால் அந்தப் பெயர்) கூட வெள்ளையை வீழ்த்தியது இல்லை. மிக லாவகமாக பாய்ந்து சென்று விடுவார். நீங்கள் கோல் அடிக்கச் சிரம்ப்பட்ட கோல்காப்பாளர் யார் என்றால், பாடும்மீன் ரவி, முன்னர் இருந்த முஸ்லீம் லீக் முனாஸ் என்பவர்களைச் சொல்கிறார். உங்கள் காலத்தில் விளையாடிய உங்களைக் கவர்ந்த சிறந்தவீரர்கள் யார் என்றால்..மெலிதாகப் புன்னகைத்து, நிறையப் பேர் இருக்கிறார்கள் என்கிறார் அடக்கத்தோடு. பழகுவதற்கு பண்பானவர். போட்டிகள் பற்றிய அவரது கதையை கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவர் சொல்லும் விதம் “ஹைலைட்ஸ்” பார்ப்பது போல இருக்கும். 

அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வெற்றிக் கோப்பைகள்
இன்றும் தன்னால் ஆன பணியை உதைபந்தாட்டத்துக்கு செய்து வருகிறார். தனது மூன்று மகன்களை முன் வரிசையில் ஆடவிட்டு களத்தில் பின்வரிசை வீரராக வெள்ளை இன்றும் விளையாடுகிறார். றோயல் பல வெற்றிக் கோப்பைகளை வென்றிருக்கிறது. அவை இன்றும் அவருடைய வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அனைத்தும் 1996 இற்குப் பின்னர் கிடைத்தவை. காலத்தின் ஒரு கோலமான இடப்பெயர்வு வெள்ளையையும் பாதித்தது. அவரது நிழற்படங்கள், அவர் பற்றிய பத்திரிகைச் செய்திகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டார். 

இளம் வீரர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டால், அதே அடக்கமான புன்னகையுடன், ‘நான் என்ன சொல்ல...ஆனால் விசிலுக்கு விளையாட வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். எதிரணி வீரர்களோடு வாக்குவாதத்திலோ, கைகலப்பிலோ ஈடுபடக்கூடாது. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நீண்ட பயிற்சி அவசியம்’ எனச் சொல்கிறார். அண்மையில் ஒருநாளில் மூன்று போட்டிகள் விளையாட வேண்டியிருந்ததாம். எல்லா வீரர்களும் களைத்திருக்க தன்னால் ஓரளவு தாக்குப் பிடிக்கக்கூடியதாக இருந்தது என கொஞ்சம் பெருமையோடே சொல்கிறார் 1963 இல் பிறந்து 48வயதான வெள்ளை. இதுதான் வெள்ளையின் யாரும் அறிய முடியா இரகசியம்.

வெள்ளை பற்றி எதிரணியில் விளையாடியவர்கள் நிறையச் சொல்வார்கள். அண்மையில் ஒருவரைக் கேட்ட போது பொறாமையாக இருக்கிறது, இந்த வயதிலும் விளையாடுகிறாரே என்றார். அவரும் ஒரு சிறந்த வீரராக இருந்தாலும் மனம் திறந்து வெள்ளையைப் பாராட்டினார். அதுதான் வெள்ளை.

வெள்ளை பற்றி நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் அவர் தொடர்பாக ஒரு ஆவணப்படம் கூட எடுக்கலாம். படித்தவர் முதல் பாமரர் வரை எவர் எல்லாம் உதைபந்தாட்டத்துக்கு ரசிகரோ அவர்கள் எல்லாம் வெள்ளைக்கும் ரசிகரே. அவரது இயற்பெயரை இரசிகர்கள் மறந்திருப்பார்கள். ஆனால் ‘வெள்ளை’ என்கின்ற பெயரை மறக்கவோ யாழ்ப்பாண உதைபந்தாட்ட வரலாற்றில் இருந்து மறைக்கவோ முடியாது. 

நன்றி : வினோ, சிவகரன், சிவரதன் (தகவல் சேகரிப்பில் உதவியவர்கள்)

Thursday, October 6, 2011

நாதஸ்வர மேதை கலாநிதி பஞ்சாபிகேசன்

அது 80 களின் நடுப்பகுதி. சிறுபராயம். காரைநகர் மணற்காடு முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிசேகம். ஏராளமான தவில், நாதஸ்வர கலைஞர்கள் வரிசையாக இருந்து கச்சேரி செய்து கொண்டிருந்தார்கள். நாதஸ்வரம் வாசித்தவர்களில் ஒருவர் மட்டும் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டுவிட்டார். நெடிய மெல்லிய தோற்றம். புன்னகை தவழும் வதனம். தலையிலே குடுமி. காதிலே கடுக்கன். நாதஸ்வரம் முழுவதும் தங்கப்பதக்கங்கள். முதன் முதலாக அவரை அங்கேதான் பார்க்கக் கிடைத்ததுஇன்றும் அதே தோற்றம். முதுமை அவரை அணைத்துக் கொண்டாலும், அவருக்கேயான அடையாளங்கள் எதுவும் அகன்றதாகத் தெரியவில்லை. கம்பீரமாகவே நின்று தனக்கான கௌரவத்தை ஏற்றுக் கொண்டார்ஆம், அவர்தான் ஈழத்தின் சாவகச்சேரி மண் பெற்றெடுத்த ஒப்பற்ற நாதஸ்வரக் கலைஞன் திருவாளர் முருகப்பா பஞ்சாபிகேசன். கடந்த வருடம்(2010) இதே தினத்தில் (ஒக்ரோபர் 6) யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் அவருக்குகௌரவ கலாநிதிபட்டம் வழங்கி கௌரவித்தது. தனது புகழையும் ஒரு படி உயர்த்திக் கொண்டது. வாழும்போதே அந்தக் கலைஞன் கௌரவிக்கப்பட்டிருக்கிறான் எனும் போது மகிழ்ச்சியே.


ஈழமண் தந்த நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் தங்களது பெயர்களை இசையுலகில் மிக ஆழமாகவே பதித்துள்ளார்கள். எம்மைப் பொறுத்தவரை கலைகளின் தாயகம் என்று நாம் நினைக்கின்ற இந்தியா குறிப்பாக தமிழகக் கலைஞர்கள் வியந்து நிற்கும் அளவு எங்கள் தேச இசைவேளாளர்களின் மரபும் வளர்ச்சியும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவிற்கு வியாபித்து இருக்கிறது. எம் மண்ணின் அரும் பெரும் சொத்தாக இருந்து மறைந்த கலைஞர்களான தவில்மாமேதை வி.தெட்சணாமூர்த்தி, நாதஸ்வர மேதை என்.கே.பத்மநாதன் வரிசையில் வாழும் கலைஞனாக இன்றும் எம்முடன் இருக்கும் சாவகச்சேரி தந்த எம்.பஞ்சாபிகேசன் அவர்களும் முக்கிய இடம் பெறுகிறார்.

கௌரவ கலாநிதி பட்டம் பெற்ற போது
1924ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் திகதி அக்காலத்தில் புகழ்பெற்ற தவில் வித்துவான் கே.முருகப்பாபிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இருவர். அவர்களுள் ஒருவரான நடராஜசுந்தரம் ஈழத்தில் புகழுக்குரிய ஒரு தவில் வித்துவான். அண்ணனோடு இணைந்து 40 ஆண்டுகள் தவில் வாசித்தவர். இவரது சகோதரி இராசம்பாள் என்பவர் தனித்தவில் மணியம் என்றழைக்கப்பட்ட சுப்ரமணியத்தின் மனைவியாவார்.

1930 களில், அப்போது நாதஸ்வர உலகில் கொடிகட்டிப் பறந்த வித்துவான்களாக சண்முகலிங்கம்பிள்ளை மற்றும் அப்புலிங்கம்பிள்ளை இருந்தனர். ஒரு நாதஸ்வரத்துக்கு ஒரு தவில் என்று இருந்த காலத்தில் முதன் முதலாக சோடியாகச் சேர்ந்து நாதஸ்வரம் வாசித்த பெருமை இவ்விருவரையும் சாரும்இவர்களுக்கு தவில் வாசித்தவர்களுள் முருகப்பாபிள்ளையும் ஒருவர். தனது மகன் நாதஸ்வரம் பயில இவர்களே சிறந்த குரு என எண்ணி பஞ்சாபிகேசனை அவரது 10வது வயதிலேயே இவர்களிடம் அனுப்பி வைத்தார். தொடர்ந்து இராமையாபிள்ளை என்பவரிடமும் பி.எஸ். கந்தசாமிப்பிள்ளையிடமும் முறையாக நாதஸ்வரம் பயின்றதன் பேறாக தனது 15வது வயதில் முதற் கச்சேரியை பருத்தித்துறை சித்திவிநாயகர் ஆலயத்தில் அரங்கேற்றினார் பஞ்சாபிகேசன்.

கம்பன் கழகம் “இசைப் பேரறிஞர்” விருது வழங்கிய போது
இசையறிவை மேலும் வளர்க்கும் நோக்கோடு தமிழகம் சென்றார். அங்கே இவருக்கு குருவாக அமைந்தவர் கக்காயி நடராஜசுந்தரம்பிள்ளை. இவர் உலகம் போற்றிய நாதஸ்வர மேதை திருவாவடுதுறை இராஜரத்தினம்பிள்ளையின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிலேயே மேலும் அய்யம்பேட்டை வேணுகோபாலபிள்ளையிடம் தனது இசையறிவை மெருகேற்றும் வாய்ப்பு பஞ்சாபிகேசனுக்கு அமைந்ததுஇராஜரத்தினம்பிள்ளையும் , மகராஜபுரம் விஸ்வநாத ஐயரும் இணைந்து படைத்த இசைநிகழ்ச்சிகளை நேரே பார்த்தும் கேட்டும் உருகியதை இன்றும் நெகிழ்வோடு பகிர்ந்து கொள்ளுவார். அதனை தனக்குக் கிடைத்த பெரும்பாக்கியமாகவே கருதுகிறார்.
தாயகம் திரும்பியதும் அவர் ஈழத்து இசையுலகில் ஒரு மறுக்க முடியாத ஆளுமையாக இருந்தார் என்பதில் ஐயமேதுமில்லை. ஈழத்தில் பல பாகத்திலும் ஆயிரக்கணக்கான கச்சேரிகளை நடாத்தியிருப்பார். இசை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு வலம் வந்தவர். அவர்களின் நெஞ்சங்களில் எல்லாம் குடியிருந்தவர். இன்றும் குடியிருப்பவர். சபையினைக் கண்ணால் அளப்பதும், அவர்களின் நாடியறிந்து அவர்களுக்கு நாதத்தை வழங்குவதிலும் பஞ்சாபிகேசனுக்கு நிகர் அவரே. இதனை இன்றும் பல இசை இரசிகர்கள் நினைத்து மகிழ்கிறார்கள்.

அப்போது திமிரி (கட்டைக்குழல்), பாரி (நெட்டைக்குழல்) என கலைஞர்கள் தமக்கிடையே முறுகிக் கொண்டிருந்த நேரம். ஆண்டாண்டு காலமாக இசைவேளாளர்கள் வாசித்து வந்த பாரியையே தொடர்ந்து தனது கைகளில் ஏந்தி வாசித்து வந்தார். தனக்கென ஒரு பாணி அமைத்து அதன் வழியே தொடர்ந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் இசையுலகில் கோலோச்சி இருந்திருக்கிறார். முதுமையின் காரணமாக கச்சேரிகளில் கால்வைக்க முடியாமல் இருந்தாலும் இதுநாள் வரை இசையுலகில் தனது கால்களை ஆழமாகவே பதித்திருக்கிறார். இசைக் கலைஞனுக்கு கற்பனை சக்தி அபாரமாக இருத்தல் வேண்டும். அத்தோடு அரங்கைக் கவரும் வண்ணமும் படைக்கவேண்டும். இவையெல்லாம் ஒருங்கே அமையப் பெற்றவர் பஞ்சாபிகேசன். தனது கச்சேரியில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் பாதிப்பு இருப்பதாக அவரே அடிக்கடி கூறுவார். அதனால்தானோ தெரியாது இவர் வாசிக்கும் போதுசிங்காரவேலனே தேவா...” என்ற பாடல் இரசிகர்களை கட்டிப் போட்டுவிடும்.

நாதஸ்வர மேதை நடுநாயகமாக....
தமிழகத்தில் இருந்து நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் ஈழத்தில் வந்து வாசித்த காலங்களில் எல்லாம் சற்றேனும் சளைக்காது அவர்கள் வியக்கும் வண்ணம் பல கச்சேரிகளை  படைத்திருக்கிறார். அவர்கள் பாராட்டையும் பெற்றிருக்கிறார். திருவாரூர் இராஜரத்தினம் பிள்ளை, திருவாரூர் லெச்சையப்பா, அம்பல் இராமச்சந்திரன், பந்தனை நல்லூர் தெட்சணாமூர்த்திப்பிள்ளை, கோட்டூர் இராஜரத்தினம்பிள்ளை என தமிழக வித்துவான்களோடு சரிநிகராக நின்று வாசித்த பெருமை பஞ்சாபிகேசனைச் சாரும்.

ஈழத்து தவில் வித்துவான்களான தவில் மாமேதை தெட்சணாமூர்த்தி, என்.ஆர். சின்னராசா, எம். நடராஜசுந்தரம். என். குமரகுரு, நாச்சிமார்கோவிலடி கணேசபிள்ளை, ஆர். புண்ணியமூர்த்தி, என்.ஆர்.எஸ் சுதாகர் (சின்னராசாவின் மகன்) ரி.உதயசங்கர்( தெட்சணாமூர்த்தியின் மகன்), கே. சிவகுமார், ஆர். நித்தியானந்தம் எனப்பலரும் பஞ்சாபிகேசனுக்கு தவில் வாசித்திருக்கிறார்கள்மேலும் இவரோடு ஈழத்தின் அனைத்து முன்னனி நாதஸ்வரக் கலைஞர்களும் பல்வேறு கச்சேரிகளில் இணைந்து வாசித்திருக்கிறார்கள். இன்று வாழ்ந்து வரும் பல வித்துவான்கள் அதனை பேறாகக் கருதும் அதேவேளை, இன்றைய இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கு அவரோடு இணைந்து வாசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் என்றும் இருக்கத்தான் செய்யும்.

கலைஞர்கள் பிரபல்யம் அடைந்துவிட்டால் அவர்களது தனிமனித ஒழுக்கம் என்பது சிறிது தடம்புரண்டுவிடும் என்பது பொதுவான கருத்து. வித்துவக்காய்ச்சல் அவர்களைப் பற்றிக் கொண்டுவிடும். ஆனால் அவற்றிற்கெல்லாம் மசிந்து விடாமல், நிலை தளம்பாமல் இன்றுவரையும் வாழ்ந்து வரும் உத்தமசீலர் என்றால் அது முற்றிலும் உண்மையே. இன்முகத்தோடு பேசுவதற்கும் பழகுவதற்கும் இனிய பண்பாளர். எதுவித பேதமும் பாராட்டாமல் அனைவரோடும் அன்பாக உறவைப் பேணினார். இவருக்கு முதன்முதலில் தங்கப் பதக்கம் கிடைத்தது யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு மீலாத் நபி விழாவில்தான். இன, மதம் கடந்து இவரது இசை எல்லோரையும் ஈர்த்தது என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இதன் பின்னர் இவருக்கு பட்டங்கள், பதக்கங்கள், பாராட்டுகள் குவிந்த வண்ணமே இருந்தது.

"லய ஞான குபேர பூபதிஎன்று எல்லோராலும் போற்றப்பட்ட தவில் மாமேதை தெட்சணாமூர்த்தி அவர்கள் தவில் வாசிக்கமாட்டேன் என்று ஒதுங்கியிருந்தவேளை, எல்லோரும் அவரை அணுகி நீங்கள் தொடர்ந்தும் வாசிக்க வேண்டும், உங்கள் தனித்தவில் நாதத்தில் நாம் மூழ்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, வாசித்தால் பஞ்சாபிகேசனுக்கு மட்டுமே தவில் வாசிப்பேன் என்று மீண்டும் இசையுலகிற்குள் வந்தார் என்றால் பஞ்சாபிகேசனின் புகழ் வானளாவ நிற்கிறது என்பதில் எதுவித ஐயமுமில்லை.

ஒருதடவை மட்டுவில் அம்மன் கோவிலில் ஒரு திருவிழாவுக்காக சகல பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்களை அழைத்திருந்தனர். அதை பத்திரிகையிலும் பிரசுரித்திருந்தனர். ஆனால் பஞ்சாபிகேசனுக்கு அவர்கள் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவில்லை. அதேபோல் தெட்சணாமூர்த்தியை அழைக்கும் போது பஞ்சாபிகேசன் வாசிக்கிறார் என்று சொல்லியிருந்தனர். அப்படியே திருவிழாவிற்கு தெட்சணாமூர்த்தி வந்திருந்தார். கோவிலுக்கு வந்திருந்த பஞ்சாபிகேசனின் மகனிடம் அப்பா வரவில்லையா என்று வினாவ, மகனோ அப்பாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறினார். அவ்வளவுதான் தெட்சணாமூர்த்தி தவிலையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். அந்தளவிற்கு பஞ்சாபிகேசனின் வித்துவத்தின் மீதும், மனிதப் பண்பின் மீதும் அளவற்ற காதல் கொண்டவர் தெட்சணாமூர்த்தி.

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள், தனது குலதெய்வமான தனங்களப்பு பிள்ளையார் கோவில் மணவாளக்கோலத் திருவிழாவுக்கு திரு.பஞ்சாபிகேசன் அவர்கள் வந்து வாசித்தால் சிறப்பாக இருக்கும் என அழைத்த போது, அதே தினத்தில் வேறு ஒரு ஆலயத்தில் கச்சேரி செய்வதற்கு ஒத்துக் கொண்டுவிட்டார். பண்டிதமணி அழைக்கிறாரே என்று ஒப்புக்கொண்டதைத் தட்டாமால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். பண்டிதமணி அவர்கள் ஊஞ்சற்பாடலின் போதாவது வாசித்துத் தரும்படி கேட்க அதனை ஏற்று குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து வாசித்து அவரின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தார். அந்தளவுக்கு பண்டிதமணி அவர்களின் மனத்தையும் வென்ற இசைக்கலைஞர் இவர். இவ்வாறுதான் பஞ்சாபிகேசன் அவர்கள் எல்லோருடனும் ஒன்றிப் பழகும் தன்மை கொண்டவர்.

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் மரபுகளை எல்லாம் உடைத்து, சமய முறைகள் அற்று, மந்திரம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட போது இராச வாத்தியமாகிய நாதஸ்வரம், தவிலை தவிர்க்க முடியாது எனச் சொல்லி, அதிலும் பஞ்சாபிகேசன் வந்து வாசித்தலே சிறப்பு என்று அழைத்து கௌரவித்தார். அதேபோல் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இவருக்கு மட்டும் இரண்டு கச்சேரிகளை ஒழுங்கு செய்திருந்தார். அந்தளவுக்கு பஞ்சாபிகேசன் தனது இசையால் எல்லோரையும் கவர்ந்தவர்.

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஏறத்தாழ 40 வருடங்களுக்கு மேலாக ஆஸ்தான வித்துவானாக தொடர்ந்து வாசித்த பெருமையும் இவருக்குரியது
தந்தையும் தனயனும்
1949ம் ஆண்டில் அளவெட்டியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகளான இரத்தினம் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் இணைந்து கொண்டார். குடும்பவாழ்வின் பயனாக ஆறு பிள்ளைகள் இவருக்கு. அதிலே இருவரை தனது வழியிலேயே நாதஸ்வர இசைக்கென அர்ப்பணித்துக் கொண்டார். தந்தையைப் போல தனயன்மாரும் வித்துவத்திலே மட்டுமல்லாது பண்பாலும் அன்பாலும் அனைவரையும் கவர்ந்தனர். ஒருவர் எம்.பி. நாகேந்திரன். அடுத்தவர் எம்.பி.விக்னேஸ்வரன். ஈழமும் அதனைக் கடந்து உலகின் பல பாகங்களிலும் தந்தையைப் போல இசையால் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர்.
தன்னுடைய 72 வயதில் பக்கவாத நோய் அவரை ஆட்கொண்டு உடலின் ஒரு பாகத்தை செயலிழக்கச் செய்த போது கூட, தனது மனவுறுதியால் அதனை எதிர்கொண்டு நோயிலிந்து மீண்டு வந்தார். தொடர்ந்தும் பல கச்சேரிகள் செய்தார். 2006 ம் ஆண்டு நண்பர் ஒருவரின் திருமண வீட்டிற்கு வந்து கச்சேரி செய்து சபையைச் சிறப்பித்தார். அந்த 82 வயதிலும் அவரின் அதே கம்பீரம், அதே இன் முகம், மக்களை மதிக்கின்ற மாண்பு எதுவும் குறைந்ததாகத் தெரியவில்லை. சற்று வியப்பாகவே இருந்தது. அந்தப் பெற்றோர்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க அரங்கிலே மங்கள வாத்தியம் வாசித்தது கலைக்காகவும், தன் மக்களுக்காகவும் அவர் எப்படி தன்னை அர்ப்பணித்திருந்தார் என்பதைப் புரியக் கூடியதாக இருந்தது.

ஏலவே குறிப்பிட்டது போல .வி.எம் சுல்தான் அவர்கள் மீலாத் விழாவில் வழங்கிய முதல்பதக்கத்தோடு இவர் பெற்ற கௌரவங்கள் தொடங்குகின்றன. இப்படிப்பட்ட ஒரு மகத்தான கலைஞனை எல்லோரும் கௌரவித்திருக்கிறார்களே என்று எண்ணும் போது அதில் வியப்பேதும் இல்லை.

திருக்கேதீஸ்வர தேவஸ்தானம் இவருக்குஇசை வள்ளல் நாதஸ்வர கலாமணிஎன்ற பட்டத்தினை வழங்கிக் கௌரவித்தது. சாவகச்சேரி இசை இரசிகர்கள்நாதஸ்வர இசை மேதைஎன்று விருது கொடுத்து மகிழ்ந்தனர். தென்மராட்சி இலக்கிய மன்றம்நாதஸ்வர சிரோன்மணிஎன்ற பட்டமும் பதக்கமும் கொடுத்து பாராட்டியது. இலங்கையின் கல்வி அமைச்சராக பதியுதீன் முகமது இருந்த காலத்தில், அமைச்சு மூலம்  “நாதஸ்வர கான வாரிதி”  என்ற கௌரவம் வழங்கப்பட்டது. திரு செல்லையா இராசதுரை அவர்கள் கலாசார அமைச்சராக இருந்த போது, அமைச்சினால்சுவர்ண ஞான திலகம்என்ற பட்டம் கிடைக்கப்பெற்றது. யாழ்ப்பாணக் கம்பன் கழகம்இசைப் பேரறிஞர்விருதினை வழங்கி சிறப்பித்தனர். “சிவகலாபூஷணம்என்ற பட்டத்தினை யாழ்ப்பாண இந்து கலாசார மன்றம் வழங்கி மாண்பு சேர்த்தது. வடக்குக் கிழக்கு மாகாண ஆளுநர் விருதும், இலங்கை அரசின்கலாபூஷணம்விருதும் அவருக்குக் கிடைத்த கௌரவங்களில் சேர்ந்து கொண்டன. இதே போல இவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கச்சேரி வாசித்த பல ஆலயங்களிலும், மன்றங்களிலும் தங்கப்பதக்கங்களும், பாராட்டுப்பத்திரங்களும் இவரது இசைக்கு கௌரவங்களாகக் கிடைத்தன

இவற்றிற்கெல்லாம் சிகரமாக அமைந்தது, இவரது வித்துவத்திறமையையும் தனியொழுக்க மாண்பையும் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2010 ம் ஆண்டு ஒக்ரோபர் 6ம் திகதிகௌரவ கலாநிதிபட்டம் வழங்கி இவரைக் கௌரவித்ததே. வாழும் போதே ஒரு கலைஞன் கௌரவிக்கப்படுவதும் அங்கீகரிக்கப்படுவதுமே அவன் கலைக்கு ஆற்றிய சேவையை உணர்ந்து கொள்ளப் போதுமானது. அந்தவகையில் திரு. பஞ்சாபிகேசன் போற்றுதலுக்கு உரிய ஒப்பற்ற கலைஞன் ஆவார்

முதுமையிலும் கம்பீரம் குறையாமல்......! 
கௌரவ கலாநிதிப் பட்டம் கிடைத்தமைக்காக இசைக் கலைஞர்கள் சேர்ந்து நடாத்திய ஒரு கௌரவிப்பு விழாவில் பஞ்சாபிகேசன் அவர்கள் இணுவில் கந்தசுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துவரப்பட்டார். அங்கே கலாமண்டபத்தில் பெரும் விழா நடந்தது.  கல்விமான்கள், கலைஞர்கள், வர்த்தகப் பெருமக்கள் என அனைவரும் ஒன்றுகூடி வாழ்த்தி மகிழ்ந்தனர். இது ஒரு கலைஞன் வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கொள்ளலாம். வாழும் போதே கௌரவிக்கப் பட்ட ஒரே ஒரு நாதஸ்வரக் கலைஞர் இவர் என்றே நான் கருதுகிறேன். அதனால்தானோ தெரியாது பெரும் திரளாகத் திரண்டு தங்கள் பிதாமகரை வாழ்த்தியும் வணங்கியும் மகிழ்ந்தனர்இந்த ஆண்டு (2011) பெப்ருவரி மாதம் 27ம் திகதி சாவகச்சேரி மண் பஞ்சாபிகேசனுக்கு பெருவிழா எடுத்து கௌரவித்தது. சாவகச்சேரி சிவன் கோவில் கலாசார மண்டபத்தில் தென்மராட்சி கல்விமான்கள், கலைஞர்கள், வணிகர்கள், கலாரசிகர்கள் என அனைவரும் திரண்டிருந்தனர். இசைக்காக தன்னை அர்ப்பணித்த ஏந்தலை உள்ளத்தில் ஏற்றி வைத்து வணங்கி மகிழ்ந்தார்கள்.
 
பஞ்சாபிகேசன் அவர்களின் புகழும் நாமமும் என்றும் எமது தேசத்தையும் மக்களையும் தாண்டி உலகதோடும் பயணிக்க வேண்டும்.
===============================================================================
நன்றி 
இந்தத் தகவல்களை சேகரிப்பதற்கு உதவிய பஞ்சாபிகேசனின் மகன் எம்.பி.நாகேந்திரன், அவரது மருமகன் பாலகிருஸ்ணன், மற்றும் நண்பர்கள் சிவதீபன், சிவரதன், நவநீதன் ஆகியோருக்கு நன்றிகள்

மாதங்கி தர்மலிங்கம் என்பவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே திருவாளர் பஞ்சாபிகேசன்  அவர்களின் இசைவாழ்வு தொடர்பாக ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருந்தார்தகவலுக்காக அவரது கட்டுரையும் உசாத்துனையாக பயன்பட்டது. அவருக்கும் நன்றிகள்


நண்பன் தர்சனின் திருமண நிகழ்வின் காணொளிப் பதிவில் இருந்தே இந்தக் காணொளிக்காட்சி எடுக்கப்படு தரவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கும் நன்றிகள்.


புகைப்படங்கள் பலவற்றைத் தந்தசதா வீடியோ” சதா அண்ணைக்கும் நன்றிகள்